ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

*‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!*



*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.*

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர்  தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,

“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு  மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில்  என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.

அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.

ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”

நடிகை கலா பேசியதாவது..,

“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,

“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம்,  இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகை சோனா பேசியதாவது..,

“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக  இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,

“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.
இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.

இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,

“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.
இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.

இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.

இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”

நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,

“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.

நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,

“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.

என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.

அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.

 இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”
இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.
அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Comments